LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1166 - கற்பியல்

Next Kural >

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காமத்தால் இன்பம் நுகர்ந்தவர் அதனால் வருந்துன்பத்தையும் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது , அவ்வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது , அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்றலாம் . துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்த்து. 'அடுங்கால் ' என்று பின்றொடரில் வந்தமையால் , அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வருவிக்கப்பட்டது.
கலைஞர் உரை:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலர் என்னுடன் இருக்கும்போது) எனக்கு வரும் காம உணர்ச்சி மிகப் பெரிய இன்பக் கடலாக இருந்தது. அவர் என்னுடன் இல்லாத இப்போது எனக்கு வரும் காம உணர்ச்சி அந்த இன்பக் கடலை விடப் பெரிய துன்பக் கடலாக இருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காமம் இன்பம் செய்கின்றபோது அந்த இன்பம் கடல் போலப் பெரிதாக இருக்கின்றது. அந்தக் காமம் பிரிவினால் துன்பம் செய்யுங்கால் அத்துன்பம் கடலினைவிடப் பெரிதாக இருக்கின்றது.
Translation
A happy love 's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul.
Explanation
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
Transliteration
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal Thunpam Adhanir Peridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >