செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)
மணக்குடவர் உரை:
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும்.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.
தேவநேயப் பாவாணர் உரை:
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - ஒருவன் அறியத் தக்க நூல்களை யறிந்து இல்லறத்தின்கண் அடங்கி யொழுகுவானாயின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த நன்மையை விளைவிக்கும்.
ஆற்றின் அடங்குதலாவது, பிறன் பொருளைக் கவராமையும் பிறன் மனைவியை விழையாமையும் பிறனைத் தனக்கு அடிப்படுத்தாமையுமாம்.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்
நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அடக்க முடைமை என்பது ஒன்றுமறியாதவனாக அடங்கி யிருப்பதன்று;) கற்க வேண்டியதைக் கற்று அறிய வேண்டியதை அறிந்து அக்கல்வியறிவின் நெறியில் அடக்க முள்ளவனாக இருந்தால், அந்த அடக்கம் எவ்வளவு மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்குச் சிறப்புண்டாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அடங்குதல் தமக்கு அறிவான செயல் என்று அறிந்துகொண்டு நன்மையான வழியில் அடங்கி இருப்பானேயானால் அந்த அடக்கமானது நல்லோரால் அறிந்துணரப்பட்டு அவனுக்குப் பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும்.
Translation
If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.
Explanation
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
Transliteration
Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்