பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)
மணக்குடவர் உரை:
குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிறநாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையுமாகிய பொறை யெல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வதுநாடு - அதனால், தன் அரசனுக்கு செலுத்த வேண்டிய புரவுவரி சிறிதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பண்பாட்டிற்கேற்ற) நல்ல நாடாவது. பிறநாட்டு மக்கள் கால் நடையுடன் வந்து குடிபுகுவதற்குக் கரணியம் , பஞ்சம், கொடுங்கோல், பகையரசு புகுதல் , வெள்ளம் முதலியவற்றுள் ஒன்றாம். ' தாங்குதல்' சொந்த நாடுபோல் உணவளித்துக் காத்தல். அது நில விரிவாலும் விளைவுப் பெருக்கத்தாலும் மக்கள் பண்பாட்டாலும் ஆட்சிச் செம்மையாலும் நேர்வதாம். குடிகள் வருவாய் குன்றாமையால் வரிகொடுப்பதுங் குன்றாதாயிற்று. நாட்டார் செயல் நாட்டின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனுடன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய குடிமக்கள் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.) பல பொறுப்புக்கள் ஒருமிக்க திடீரென்று வந்துவிட்டாலும் அவற்றைத் தாங்கி நின்று சமாளிப்பதற்காக, வழக்கமில்லாத புது வரிகளையும் மற்ற உதவிகளையும் சேர்த்து அரசனுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிற குடிகளை உடைய நாடே நல்ல நாடு.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் தன் மீது வந்தாலும் அவற்றைத் தாங்கி அதற்குமேல் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் கொடுப்பதே நாடாகும்.
Translation
When burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land'
Explanation
A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.