LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 103 - இல்லறவியல்

Next Kural >

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.
தேவநேயப் பாவாணர் உரை:
பயன் தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின்- இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின்; நன்மை கடலின் பெரிது- அதன் நன்மை கடலினும் பெரியதாம். காலத்தினாற் செய்த நன்றி பயன்தூக்கியதாகவு மிருக்கலா மாதலால், பயன் தூக்காது செய்த வுதவியும் ஒருவகையிற் பெரியதே யென்றார்.
கலைஞர் உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிரதிப் பிரயோசனத்தைக் கருதாமல் செய்கிற உதவியிலுள்ள அன்பை அளக்கப்போனால் அது கடலைவிடப் பெரியதாக, அளக்க முடியாததாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனக்குத் திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் ஒருவன் செய்த உதவியினை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலையும் விடப் பெரிதானதாகும்.
Translation
Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Explanation
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
Transliteration
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin Nanmai Katalin Peridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >