ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)
புணர்வது நீடுவது(கொல்) அன்றுகொல் என்று-இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதலால் ; ஊடலின் ஒர் துன்பம் உண்டு-இன்பத்திற்கேதுவான ஊடலிலும் ஒரு துன்பமுள்ளதாம்.
விரைந்து கூடற்கேதுவான ஊடலே பயன்தருவதென்பதாம் . கருதுதலால் என்பது அவாய்நிலையால் வந்தது . -சிறப்பும்மை தொக்கது . ' கொல்' முன்னுங் கூட்டப்பட்டது . ' ஆங்கு ' அசைநிலை.
கலைஞர் உரை:
கூடி முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து
விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு
உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிணங்குவது சுவை தருவதென்றாலும்) பிணங்குவதிலும் ஒரு துன்பம் இருக்கிறது. என்னவெனில், பிணங்கி யிருந்தால் அவர் தாமதித்துப் புணருவாரோ அல்லது புணராமலேயே இருந்து விடுவாரோ என்று ஏங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று எண்ணுவதால் இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலினும் உண்டாவதொரு துன்பம் இருக்கின்றது.
Translation
A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'
Explanation
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike
Transliteration
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்