LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 995 - குடியியல்

Next Kural >

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)
மணக்குடவர் உரை:
தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது: ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார்மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
தேவநேயப் பாவாணர் உரை:
நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது -விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் பழித்தல் அவருக்குத் துன்பந்தருவதாம்; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் பகைமையுள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன. பாடறிந்தொழுகுவார் பிறருக்குத் துன்பந்தருவதை விலக்குவராதலின், பகைவருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து. உம்மைகள் இழிவு சிறப்பு.
கலைஞர் உரை:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிறருடைய துன்பங்களை அறிந்தவர்களான பண்பு டையார், பகைவர்களுக்கும் இரக்கத்தோடு இகழாமல் உதவி செய்வார்கள். பண்புடையவர்களுக்கு விளையாட்டாகக்கூடப் பிறரை இழிவாக நடத்துவது துன்பமான காரியம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னை இகழ்தல் என்பது ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் துன்பம் தருவதாகும். ஆதலால் பிறருடைய தன்மையறிந்து நடப்பவரிடத்தில் பகையுள்ள போதும் இனிமையான நற்பண்புகள் இருப்பனவாகும்.
Translation
Contempt is evil though in sport. They who man's nature know, E'en in their wrath, a courteous mind will show.
Explanation
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
Transliteration
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum Panpula Paatarivaar Maattu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >