முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
முயற்சி திருவினை ஆக்கும் -விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும் -அம்முயற்சியில்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்திவிடும்.
அரசனுக்குப் படைகுடி கூழமைச்சு நட்பரண்களும் நாடும் சிற்றரசும் செல்வமாகக் கருதப்பெறும். வறுமை அவற்றின் குறைவும் அரசிழப்புமாகும்.
கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆதலால், விடாமுயற்சியுடன் காரியம் செய்யவேண்டும். இல்லாவிடில்) அடுத்தடுத்து முயற்சி செய்கிறவர்களுக்குச் செல்வம் அதிகப்படும். முயற்சி யில்லாதவர்களுக்கு உள்ள செல்வம் குறைந்து வறுமையும் வந்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முயற்சியானது செல்வத்தினை வளர்க்கும். அம்முயற்சி இல்லாதிருப்பதானது வறுமையில் கொண்டு போய் விட்டுவிடும்.
Translation
Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.
Explanation
Labour will produce wealth; idleness will bring poverty.