திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.
சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர்.
உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல்.
கல்லாது நீண்ட வொருவ னுலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ
துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)
கலைஞர் உரை:
கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால்
கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கல்லாதவர்கள் கற்றறிந்தார் சபையில் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.) கற்றறிந்தார் கூடியுள்ள சபையில் பேசாமல் இருக்கிற வரையிலும் கல்லாதவர்கள் வெகு நல்லவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தாமே தம்மையுணர்ந்துகொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள்.
Translation
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.
Explanation
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
Transliteration
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்