கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கல்லா ஒருவன் தகைமை-நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் -அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம்.
கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது.
"காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே-நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற்
கீச்சுக்கீச் சென்னுங் கிளி"
என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக்குறட் பொருளை விளக்குவதாகும்:
கலைஞர் உரை:
கல்வி யறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல்
காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம்
அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கற்றவன்போல் அறிவுள்ள சொற்களை மனப்பாடமாகப் பேசிவிட்டாலும் அவன் கல்லாதவன் என்பது எளிதில் வெளியாகி விடும்.) கல்லாத ஒருவன் கற்றவனைப் போலப் பாசாங்கு செய்த தன்மை அவனுடன் நெருங்கிப் பேச்சுக் கொடுத்தால் வெளியாகி விடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.
Translation
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.
Explanation
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).