ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு - தம் அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையா ரல்லாதார்க்கு; கயவர் ஈர்ங்கை விதிரார் - கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார். கயவர் வலியார்க்கன்றி மெலியார்க்கு இம்மியுங் கொடார் என்பது, இக்குறளால் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கயவர்கள் தம்முடைய) தாடையில் அடித்துப் பல்லை உடைக்கக்கூடிய கைவலிமை உடையவர்களுக்கன்றி மற்ற யாருக்கும் உணவுண்ட ஈரக் கையைக்கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முறுக்கிய கையினால் தமது கன்னத்தினை நெறிப்பவர்க்கு அல்லாமல் கீழ்மக்கள்தாம் உணவு உண்டு பூசிய ஈரக்கையினையும் யாசிப்பவர்களுக்குத் தெறிக்கமாட்டார்கள்.
Translation
From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.
Explanation
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
Transliteration
Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்