ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான்- தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; தான்துவ்வான் -அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம் ஏதம் -அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன். செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோய் போற் கெடுத்தலின், ' நோய் ' என்றார். ' தக்கார் ' அந்தணர்,அடியார்,புலவர் முதலியோர் ' தக்கார் என்றதனால் , ' தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். ' ஏதம்' ஆகுபெயர். எச்சவும்மை தொக்கது.இனி, அவ்விரு பயனும் கொள்ளாதவனது பெருஞ் செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்த தன்று.
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்தச் செல்வத்தைச் சேர்ப்பதிலும் துன்பம்; பாதுகாப்பதிலும் துன்பம்; உதவியற்ற செல்வமென்று ஊரார் பழிப்பதும் துன்பம். ஆகையினால்) தானும் அனுபவிக்காமல் தகுதியுடைய பிறருக்கும் கொடுக்காமல் சேர்த்து மட்டும் வைக்கிறவ னுடைய பெருஞ் செல்வம் அவனுக்கு வெறும் துன்பந்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தான் நுகர்ந்து அனுபவியானாகி தகுதியுடையவர்களுக்குக் கொடுப்பதென்னும் ஈகையும் செய்யாதவனால், அவன் அந்த இரண்டும் செய்வதற்குரிய செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
Translation
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
Explanation
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.